×

காஞ்சிபுரம் அருகே காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற 3 லாரிகள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பலகோடி மதிப்புள்ள இறக்கைகள் சேதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சூறாவளி காற்றுவீசியதால் காற்றாலை இறக்கைகள் ஏற்றிச்சென்ற 3 லாரிகள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் பல கோடி மதிப்புள்ள இறக்கைகள் சேதமானது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காற்றின் மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தும் வகையில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழ கத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.

மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலை களில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும். இந்த இறக்கைகள் பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 பெரிய லாரிகளில் டிரக்குகள் மூலம் காற்றாலைக்கான இறக்கைகள் ஏற்றப்பட்டு நிறுவன அதிகாரிகள் மேற்பார்வையில் கர்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. லாரிகளில் 120 அடி நீளமும் 10 டன் எடையுள்ள காற்றாலை இறக்கையுடன் 1.8 மெகா வாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டரும் இருந்தன.

இதனிடையே, நேற்று மாலை காஞ்சிபுரம் அருகே பிள்ளைச்சத்திரம் பகுதியில் சாலையோரத்தில் 3 லாரிகளும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அப்போது திடீரென சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்குகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் 20 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக 3 லாரிகளும் கவிழ்ந்தன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை இறக்கைகள் சேதமானதாக கூறப்படுகிறது. கவிழ்ந்த லாரிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னணி தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தனியார் நிறுவன ஊழியர்களும், காற்றாலை உற்பத்தி நிறுவன அதிகாரிகளும் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக், தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்ததன் பெயரில் பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

The post காஞ்சிபுரம் அருகே காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற 3 லாரிகள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பலகோடி மதிப்புள்ள இறக்கைகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...